ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீ ராமர், சீதா தேவி, ஹனுமன் உள்ளிட்ட இந்து கடவுள்கள் குறித்து இழிவாகப் பேசிய உதவி இயக்குநரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், என தமிழக முதல்வருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜர் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தின் 24 வது பீடாதிபதி ஸ்ரீ சடகோப ராமானுஜர் உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்து இருப்பதாவது,
'கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பற்றி அவதூறாக பேசினார்கள். அதன் பின் முருகப்பெருமான் குறித்து அவதூறாக பேசினார்கள். அவர்களை கைது செய்யவில்லை. இப்பொழுது உலகமே போற்றி வணங்கும் ஶ்ரீ ராமர், சீதா தேவி, ஹனுமன் ஆகிய கடவுள்கள் குறித்து, விடுதலை சிகப்பி என்பவர் மிகவும் இழிவாகப் பேசி உள்ளார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும்.
இதுபோல இந்து மத கடவுள்களை குறி வைத்து சில கரும்புள்ளிகள் மிகவும் இழிவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தமிழக முதல்வருக்கு கெட்ட பெயர் உண்டாகி வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.
மேலும் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளிலும் இந்து மத கடவுள்கள் குறித்து இழிவாக பேசுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.