'நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும்'  - சசிகலா, தினகரன் படத்துடன் ஓபிஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்

By என்.சன்னாசி

மதுரை: 'நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும்' என்ற வாசகங்களுடன் ஜெயலலிதா, சசிகலா, டிடிவி தினகரன் புகைப்படங்களுடன் கூடிய போஸ்டர்களை ஓபிஸ் ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டியுள்ளனர்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கான ஆதரவாளர்களை திரட்டி திருச்சியில் சமீபத்தில் மாநாடு நடத்தினார். இதைத் தொடர்ந்து சசிகலா, டிடிவி தினகரனை சந்திக்கப் போவதாகவும் அவர் கூறினார். இதன்படி, மே 8-ம் தேதி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை அவரது சென்னை இல்லத்தில் ஓபிஎஸ் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, செய்தியாளர்களிடமும் அவர்கள் பேசினர்.

இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான எம்ஜிஆர் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் ராஜ்மோகன் என்பவரின் பிறந்தநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். அவற்றில் 'நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும்' என்ற வாசகங்களுடன் ஓபிஎஸ், ஜெயலலிதா, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. 2 நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்தபோதிலும், தினகரன் படமும் இதில் இடம் பெற்றுள்ளது.

மேலும், சசிகலாவை சந்திக்கும் முன்பே அவரது படமும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்த போஸ்டர்களில் இடம் பெற்று இருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE