மின்னூர்திகள் தயாரிப்பில் தமிழகம் முன்னணி மாநிலமாக உருவாகியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: மின்னூர்திகள் தயாரிப்பில் தற்போது தமிழகம் முன்னணி மாநிலமாக உருவாகியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ரூ.20,000 கோடி முதலீட்டில், தொழிற்சாலை நவீனமயமாக்கல் மற்றும் நவீன வகை கார்கள் உருவாக்குதல், மின்வாகன மின்கலன் தொகுப்பு, மின்வாகன மின்னேற்று நிலையங்கள் அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கான வசதிகளை செய்து தருவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,"1996ம் ஆண்டு டிசம்பர் மாதம், கருணாநிதி ஹூண்டாய் நிறுவனத்தினுடைய முதல் அலகிற்கு அடிக்கல் நாட்டினார்கள். 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டாவது தொழிற்சாலையையும், கருணாநிதியால் 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டது. இதே ஹூண்டாய் நிறுவனத்தினுடைய ஒரு கோடியாவது காரை 2021ம் ஆண்டு ஜூன் மாதம் தொழிற்சாலையில் இருந்து நான் அறிமுகம் செய்து வைத்ததை இந்த நேரத்தில் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழகத்திற்கும், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே உள்ள நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சியின் காரணமாக இந்த நிறுவனத்தினுடைய மொத்த முதலீடு சுமார் 23 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது நமக்கெல்லாம் பெருமை அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்திருக்கிறது. தற்போது ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாகவும், கார் ஏற்றுமதியில், இரண்டாவது இடத்தில் இருப்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.

ஆட்டோமொபைல் மற்றும் அதன் பாகங்கள் தயாரிப்பில், தமிழகம், இந்தியாவிலேயே முதலிடத்தை வகிக்கிறது. அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக, மின்னூர்திகள் (Electrical vehicles) தயாரிப்பில் தற்போது தமிழகம் முன்னணி மாநிலமாக உருவாகியுள்ளது உள்ளபடியே பாராட்டுக்குரியது. இதற்கு, தமிழகத்தில் உள்ள திறன் வாய்ந்த மனித வளம், உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு ஆகியவற்றுடன், தமிழக அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முக்கிய காரணங்களாக உள்ளன. அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான், 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் "தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023" என்னால் வெளியிடப்பட்டது.

இதன் காரணமாக, ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், இந்தியாவிற்கும், பிற உலக நாடுகளுக்கும், மின்னூர்தி தயாரித்தலுக்கான தனது நெடுங்கால முதலீட்டுத் திட்டத்திற்கு, முதன்மை தளமாக தமிழகத்தை தேர்வு செய்துள்ளது உள்ளபடியே நமக்கெல்லாம் பெருமை அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்திருக்கிறது. அதற்காக, தமிழக அரசின் சார்பாக எனது நன்றியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஹுண்டாய் நிறுவனம், இருங்காட்டுக்கோட்டையில் தற்போதுள்ள தொழிற்சாலையினை, உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைக்கான மின்னூர்தி மையமாக மேம்படுத்தும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. இந்நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்து நிலைக்கத்தக்க தயாரிப்பினை முக்கிய கருப்பொருளாகக் கொண்டு, 15 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும், 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக முனைந்து செயல்படும் இந்த அரசின் முயற்சிகளுக்கு இது உறுதுணையாக உள்ளது என்பதால் உங்களை நான் மனதார பாராட்ட விரும்புகிறேன்.

தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த, ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்த நம்முடைய தங்கம் தென்னரசுவிற்கும், அவருக்கு உதவியாக இருந்த தொழில் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தொழில்துறை அதிகாரிகளும், இந்திய அளவில் மட்டும் இன்றி, பல்வேறு நாடுகளுக்கும் சென்று முன்னணி தொழில் துறையினரை சந்தித்து பெரும் முதலீடுகளை ஈர்த்து, தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளனர். அதற்காக, நான் அவர்களை இந்த நேரத்தில் மனதார பாராட்ட விரும்புகிறேன்.

மேலும், இன்றைய தினம், தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா, மிகவும் முனைப்புடன் செயல்பட்டு, அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த நிலையில், உங்களுக்கு நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது, நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாறினாலும், தமிழக அரசு, தொழில் துறையினருக்கு அளித்துவரக்கூடிய ஆதரவும், தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளும் என்றும் தொடரும் என்று இந்த தருணத்தில் நான் கூற விரும்புகிறேன்.

தலைவர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்டு, தமிழகத்தில் பல விரிவாக்கங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொண்டு வரும் ஹூண்டாய் நிறுவனம், தற்போது 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்திருப்பது இதுவே சாட்சியாக அமைந்திருக்கிறது. இந்த முதலீடு, தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030ம் ஆண்டிற்குள், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்ற நமது இலட்சிய இலக்கினை அடைவதற்கு ஒரு பாய்ச்சலாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

இங்கே வெகு சிறப்பாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய ஹூண்டாய் நிறுவன அலுவலர்களுக்கும், நமது அரசு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில் துறை நிச்சயமாக ஏற்கனவே முன்னேறி வந்திருக்கிறது. இன்னும் முன்னேறப் போகிறது. அதற்கு இன்னுமொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்று சொன்னால், நான் கடந்த ஆண்டும் சரி, இப்போது இந்த ஆண்டும் சரி, எந்த நிகழ்ச்சியில் அதிகம் கலந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால், தொழில்துறை நிகழ்ச்சியில் தான் அதிகம் கலந்து கொண்டிருக்கிறேன். அதுவே அதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது என்று கூறி, நமது அரசு அலுவலர்களுக்கும், ஹூண்டாய் நிறுவன அலுவலர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

இணைப்பிதழ்கள்

11 mins ago

தமிழகம்

40 secs ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்