புதுச்சேரி: புதுச்சேரியில் கோயில்களுக்கு முன்பு மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "புதுச்சேரி மாநிலத்தில் கோயில் சொத்துக்கள் நிறைய ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. குறிப்பாக அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கின்றது. புதுச்சேரி காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமாக நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை எதிர்த்து இந்து முன்னணி பலக்கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கின்றது. அதன் விளைவாக சிலபேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்த இடத்துக்கு போலி பத்திரம் தயாரித்துள்ளனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்தது யார்? வருவாய்துறையினரா, அறநிலையத்துறை அதிகாரிகளா என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காவிட்டால் இந்து முன்னணி போராட்டம் நடத்தும். இதுபோல் சன்னியா சித்தோப்பு பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருகின்றனர்.
இதற்கு போலி ஆவணங்கள் தயாரிக்கவும் சில அரசியல் வாதிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதனை அரசு உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் கோயில்களுக்கு முன்பு மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ரெஸ்டாரண்டுடன் கூடிய மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. மசூதிகளுக்கு முன்பு இறைச்சிக்கடை திறக்க முடியுமா? அப்படி திறக்க அனுமதி கொடுக்க இந்த அரசுக்கு திராணி இருந்தால், இந்து முன்னணி இறைச்சிக்கடை போட தயாராக இருக்கிறது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அது வரவேற்கத்தக்கது. அதுபோல் இந்து பண்டிகைகளுக்கு, இந்து மத தலைவர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தினால், இது மத சார் பற்ற நாடு, எல்லாவற்றையும் சமமாக நடத்து கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்வோம். இல்லாவிட்டால் ஆளுநர் மாளிகை முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல. யாரெல்லாம் இந்துக்களுக்கு ஆதரவாக இருக்கின்றனரோ அவர்களை ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
தமிழகத்தில் கோயில் சொத்துக்களை நிறைய மீட்டுள்ளோம் என்று அரசு சொல்வதில் திருப்தி இல்லை. தமிழகத்தில் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பலர் கோயில் இடங்களுக்கு போலி பத்திரம் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமான அரசு நடக்கிறது. இந்து கோயில்களை இடிப்பதில் வேகமாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்தி வருகின்றோம். சமீபத்தில் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக மாற்றம் வரும்'' என்றார்.
அப்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பிறகுதான் இந்து, திராவிடம் என்ற பிரச்சனை அதிகமாக தலை தூக்கி உள்ளதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஆளுநர் ரவி தனது கருத்தை சொல்கிறார். அதற்கு பதில் சொல்வதை விடுத்து அவரை விமர்சிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது தமிழக மாநில செயலாளர் மனோகர், புதுச்சேரி மாநிலத் தலைவர் சனில்குமார் உடனிருந்தனர்.