சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் சாலையில் போக்குவரத்து இடையூராக சுற்றித்திரிந்த மாடுகளால் ஏற்பட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவர் ஆகாஷ்(20) உயிரிழந்தார்.
சிவகாசி அருகே முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் ஆகாஷ்(20). இவர் சிவகாசி அரசு கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். படித்து கொண்டே உணவகத்தில் பகுதி நேர வேலைக்கும் சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சிவகாசி - திருத்தங்கல் சாலையில் ஆகாஷ் பைக்கில் சென்றார். அப்போது சாலையின் குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஆகாஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி மாநகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூராக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கடந்த சில மாதங்களுக்கு முன் வருவாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து பறிமுதல் செய்தனர். ஆனால் அதன்பின் தொடர் நடவடிக்கை இல்லாததால் தற்போது சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.