சென்னை: உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக மாணவ, மாணவியர்களுக்கு வருவாய்த்துறையின் வாயிலாக வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்கிட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதல்வர், மாணவ, மாணவியர்கள் தங்களுடைய உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக, வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை முன்னுரிமை கொடுத்து உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களையும் அறிவுறுத்தி உள்ளார்.
இச்சான்றிதழ் அனைத்தும் இணைய வழியாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மாணவ, மாணவியர்கள் இணைய வழியாக விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வருவாய்த்துறையின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும், சான்றிதழ்களை எவ்வித காலதாமதமின்றி வருவாய் வட்டாட்சியர்கள் / வருவாய் கோட்டாட்சியர்கள் உடனடியாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளேன்" என்று அவர் கூறியுள்ளார்.