தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று (மே 9) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென்‌ இந்திய பகுதிகளின்‌ மேல்‌ வளிமண்டலத்தின்‌ கீழடுக்குகளில் ‌ கிழக்கு திசை காற்றும்‌, மேற்கு திசை காற்றும்‌ சந்திக்கும்‌ பகுதி நிலவுகிறது.

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதியில்‌ நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணி அளவில்‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில்‌ நிலைகொண்டுள்ளது. இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும்‌ வலுப்பெற்று நாளை தென்கிழக்கு மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ புயலாக மேலும்‌ வலுபெறக்கூடும்‌.

இது 11.05.2023 ஆம் தேதி வரை வடக்கு-வடமேற்கு திசையில்‌ நகரக்கூடும்‌. அதன்‌ பிறகு வடக்கு - வட கிழக்கு திசையில்‌ திரும்பி வங்கதேசம்‌ - மியன்மார்‌ கடற்கரை நோக்கி நகரக்கூடும்‌.

இதன் காரணமாக இன்று, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும். நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று சூறாவாளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE