சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பள்ளிக்கல்வித் துறையால் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 94.03 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகள் 96.38 சதவிகிதமும், மாணவர்கள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றனர்.
திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் வணிகவியல் மாணவி ச. நந்தினி அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்னான 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மாணவி ச. நந்தினி, இன்று முதல்வரை, தன் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன், முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது முதல்வர், அம்மாணவியிடம் உயர்கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.