பழநியில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது

By ஆ.நல்லசிவன்

பழநி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகி முகமது கைசர் இன்று காலை என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தடை தொடர்பாக தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், திண்டுக்கல் மாவட்டம் பழநி திருநகரைச் சேர்ந்த முகமது கைசர் (50) வீட்டிற்கு இன்று (மே 9) காலை வந்த என்ஐஏ அதிகாரிகள் 5 பேர், முகமது கைசரை அவரது வீட்டில் வைத்து விசாரித்தனர். விசாரணை முடிவில் அவரை கைது செய்து மதுரைக்கு அழைத்து சென்றனர்.

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் மதுரை மண்டலத் தலைவராக உள்ள இவர், பழநியில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் முகமது கைசர் மற்றும் பழநியை சேர்ந்த சதாம் உசேன் (26) உட்பட சிலரிடம் என்ஐஏ அதிகாரிகள் 3 நாட்கள் பழநி நகர் காவல் நிலையத்தில் வைத்து, கோவை மற்றும் கர்நாடகாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் பிஎப்ஐ குறித்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை முகமது கைசரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE