வழக்கறிஞராக பதிவு செய்ய கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து வழக்கு

By செய்திப்பிரிவு

சென்னை: திருச்சியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழக மாணவர் மணிமாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சட்டப் படிப்பை நிறைவு செய்த பின்னர் வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ.11,100-ம், இதர மாணவர்களுக்கு ரூ.14,100-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சமூகத்தில் பின்தங்கிய சூழலில் சட்டப்படிப்பை முடித்து வெளியே வரும் பட்டதாரிகளால் இந்த தொகையை செலுத்துவது என்பது சிரமமான காரியம்.

அரசு சட்டக் கல்லூரிகளில் ஓராண்டு படிப்பு கட்டணம் ரூ.500 மட்டுமே என்ற நிலையில், பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்கான கட்டணத்தை அதிகப்படுத்தியிருப்பது ஏற்புடையதல்ல. சட்டரீதியாக பார் கவுன்சிலில் பதிவுக் கட்டணமாக ரூ.750 மட்டுமேவசூலிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், அகில இந்திய பார்கவுன்சில் மற்றும் தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கஉத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE