சென்னையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தாமிரபரணியில் மூழ்கி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சென்னையை சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சக்தி. ரயில்வே தபால் சேவை நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக உள்ளார். திருநெல்வேலி அருகே திருவேங்கடநாதபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு தனது குடும்பத்தினருடன் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வந்திருந்தார்.

அவருடன் நண்பர்களான சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஸ்ரீராம் (25), ஆட்டோ ஓட்டுநர்களான அருண் (23), வினோத் ஆகியோரும் வந்திருந்தனர்.

நண்பர்கள் அனைவரும் திருவேங்கடநாதபுரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் நேற்று காலை குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென ஸ்ரீராம், அருண் ஆகியோர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களை மற்ற நண்பர்களும், அங்கிருந்தவர்களும் காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை.

நீண்டநேர தேடுதல்: பேட்டை தீயணைப்பு படையினரும், சுத்தமல்லி போலீஸாரும் அங்குவந்து ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்துக்குப்பின் ஸ்ரீராம், அருண் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து சுத்தமல்லி போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE