சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் நாளை முதல் 13-ம் தேதி வரை மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் நாளை முதல் 13-ம் தேதி வரை மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ”விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் நாளை (9-ம் தேதி ) காலை 11 மணி முதல் 13-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன்பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.
விடைத்தாளின் நகல் (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம்: ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275/-
» நம்பிக்கையுடன் முன்னேறிச் சென்று உலகை வெல்லுங்கள்: பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து
மறுகூட்டல்-I (Re-totalling-I) கட்டணம் : உயிரியல் பாடத்திற்கு மட்டும் - ரூ.305, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-
பணம் செலுத்தும் முறை: தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் :இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறை: விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.