அமைச்சருக்காக காத்திருக்கும் அதிகாரிகள்: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் 

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் 9.45 மணி ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 3,324 மையங்களில் கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஏப். 3-ம் தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறைக் கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை.

விடைத்தாள் திருத்தும் பணி 79 மையங்களில் ஏப்.10-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடந்தது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று காலை 9.30 மணிக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதமானது. அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்திற்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரத் தாமதம் ஆன காரணத்தால் பிளஸ் 2 தேர்வு முடிவு முடிவுகள் வெளியாக தாமதமாகிறது. இதன் காரணமாக அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அமைச்சருக்காக அதிகாரிகள் காத்துக் கொண்டு உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE