தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்ததாழ்வுப் பகுதி உருவாகிறது: நாளை புயலாக மாறக்கூடும்

By செய்திப்பிரிவு

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (மே 8) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் (நேற்று) வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதனால் அப்பகுதிகளில் இன்று (மே 8) புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகக்கூடும். இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

வட தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களிலும், மே 9, 10, 11-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதேபோல, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 11-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 7-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஆகிய இடங்களில் தலா9 செ.மீ., விழுப்புரம் மாவட்டம்முகையூர், மதுரை தல்லாகுளத்தில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டி அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 11-ம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE