1,771 பேருந்துகள் கொள்முதலுக்கு டெண்டர் கோர அவகாசம் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,771 பேருந்துகளை தயாரித்து வழங்குவதற்கான டெண்டர் கோர மே 23-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,771 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்டது. அதன்படி, பிஎஸ்-6 வகை குளிர்சாதனம் இல்லாத டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

போக்குவரத்து கழக வாரியாக சென்னை - 402, விழுப்புரம் - 347,சேலம் - 303, கோவை - 115,கும்பகோணம் - 303, மதுரை - 251, திருநெல்வேலி - 50 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. இதுதொடர்பான விவரங்கள் www.tenders.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

பழைய பேருந்துகளோடு ஒப்பிடும்போது, இந்த பேருந்துகளில் சிறிய அளவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஏறி, இறங்க 3 படிகள் உள்ளநிலையில் இந்த பேருந்துகளில் 2 படிகள், பேருந்துகளை முழுமையாக கண்காணிக்க ஒருங்கிணைந்த மென்பொருள் என நவீன வசதிகளோடு புதிய பேருந்துகள் வடிவமைக்கப்படுகின்றன. பேருந்துகளை தயாரித்து வழங்க தேசிய மற்றும் சர்வதேச அளவில் தகுதி பெற்ற நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

இதற்கிடையே, டெண்டருக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்ததால் தொடர்ந்து அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இப்போது தீர்ப்பு பெறப்பட்டுவிட்டது. எனவே, மே 23-ம் தேதிக்குள் டெண்டர் கோரலாம் என அறிவித்துள்ளோம். நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக கொண்டு, அரசின் வழிகாட்டுதல்படி பேருந்து கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE