கடல் அரிப்பைத் தடுக்க செயற்கை பாறை அமைக்க கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழகத்தின் கடலோர கிராமங்களில், கடல் அரிப்பைத் தடுக்க செயற்கை பாறை அமைக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கூடுதாழை தோமையார்புரம், கூட்டப்புளி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியான கடலோர அரிப்பினால் மீனவர்களுக்கு சொந்தமான பல வீடுகள், படகுகள் மற்றும் கடற்பரப்புகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. எனவே, பசுமை காலநிலை நிதியின் கீழ் தூண்டில் வளைவு அமைக்க 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடலோரப் பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது எனக் கூறி, தூண்டில் வளைவு அமைக்க தடை விதித்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மீனவ நலச்சங்கத்தின் தலைவர் பீட்டர் ராயன் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், "கடல் அரிப்பைத் தடுக்க, தமிழக கடலோரப் பகுதிகளில் செயற்கை பாறை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து, மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE