திண்டிவனம் சிப்காட்டில் ரூ.155 கோடியில் மருந்து பூங்கா - முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டினார்

By செய்திப்பிரிவு

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் 111 ஏக்கர் பரப்பளவில், ரூ.155 கோடியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள மருந்து பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சிப்காட் தொழில் பூங்காவில் 111 ஏக்கர் பரப்பளவில் ரூ.155 கோடி மதிப்பில், பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட மருந்து பூங்கா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, பெருங்குழும திட்டத்தின்கீழ் அமைக்கப்படுகிறது.

இத்திட்டத்துக்கு தமிழக அரசின் நிதியுதவியாக ரூ.51.56 கோடியும், மத்திய அரசின் நிதியுதவியாக ரூ.20 கோடியும் ஒதுக்கப்பட்டு, பொது வசதி மையம், உலகளாவிய தரக்கட்டுப்பாட்டு சோதனை மையம், பூஜ்ய திரவ வெளியேற்றத்துடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மருந்து பொருட்களை சேமிப்பதற்கான சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளன.

இப்பூங்காவில் 40-க்கும் மேற்பட்ட மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அமைக்கப்படுவதன் மூலம் 6 ஆயிரம் பேர் நேரடியாகவும், 10 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இந்த மருத்துவப் பூங்கா திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

புத்தொழில் நிதி திட்டம்: புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை அடைய தமிழக அரசால், தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி, இந்தப் பிரிவுகளைச் சார்ந்த தொழில்முனைவோரால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடன் வழங்க கடந்த நிதியாண்டில் ரூ.30 கோடியில் நிதியம் தொடங்கப்பட்டது. இந்த நிதிஆண்டில் ரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்திருந்த நிறுவனங்களில் இருந்து தகுதியான நடுவர் குழுவின் வாயிலாக 2 கட்டமாக 8 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேம்பட்ட உற்பத்தி, பொழுதுபோக்கு ஊடகம், கட்டிடவியல், செயற்கை நுண்ணறிவு, மருத்துவத்தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், பழங்குடியினரால் தொடங்கப்பட்ட பசுமை எரிபொருள் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு ரூ.9.75 கோடி பங்குமுதலீடு வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை முதல்வர் வழங் கினார்.

புத்தொழில் ஆதார நிதி: தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு, ஆதரவு அளிக்கும் வகையில், தகுதியான நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் ஆதார நிதியாக ‘தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி – டேன்சீட்’திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கிவருகிறது. இதுவரை 84 புத்தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளன.

தற்போது டான்சீட் 4-வது பதிப்பின் 2-ம் கட்டமாக உற்பத்தி, நவீன கட்டிடவியல், இணைய பாதுகாப்பு, மாற்று திறனாளிகளுக்கான தொழில்நுட்பம், மருத்துவத் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறை சார்ந்து இயங்கும் 25 நிறுவனங்கள் புத்தொழில் ஆதார நிதியைப் பெற தேர்வு பெற்றுள்ளன.

அதன்படி, இந்த நிறுவனங்களுக்கு முதல் தவணை நிதியாக தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.25 கோடி நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை முதல்வர் நேற்று வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE