மே 23 முதல் ஜூன் 2 வரை முதல்வர் ஸ்டாலின் 4 நாடுகளுக்கு பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் முதலீட்டாளர்களைச் சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 23-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை பயணம் செய்வது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் வகையில், தொடர் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 2024 ஜனவரி மாதம் 11, 12-ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து முயற்சிகளும் தற்போதே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றார். துபாய், அபுதாபியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பின் மூலம், 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.2,600 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அடுத்தகட்டமாக முதலீட்டாளர்களைச் சந்திக்க வரும் மே 23-ம் தேதி இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகளுக்குச் செல்ல முதல்வர் திட்டமிட்டு, அதற்கான அனுமதி மத்திய அரசிடம் கோரப்பட்டது. இந்த அனுமதி கிடைத்துள்ள நிலையில், வரும் 23-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத் திட்டம் தொடர்பாக, கடந்த 2-ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவரிக்கப்பட்டு, ஒப்பதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE