சேலத்தில் இருந்து சென்னைக்கு ‘வந்தே பாரத்’ ரயிலில் பழனிசாமி பயணம்

By செய்திப்பிரிவு

சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ‘வந்தே பாரத்’ ரயிலில் சேலத்தில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொண்டார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமமாகும்.

அவர், முதல்வராக இருந்தபோது தொடங்கி, தற்போது வரை, சேலம் சூரமங்கலம் அருகே நெடுஞ்சாலை நகரில் உள்ள தன் வீட்டை முகாம் அலுவலகமாக பயன்படுத்தி அரசுப் பணிகள் மற்றும் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவர், சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு, கார் அல்லது விமானப் போக்குவரத்தை பயன்படுத்துவது வழக்கம். சேலம் விமான நிலையத்தில் இருந்து விமானம் இயக்கப்படாமல் இருப்பதால், காரில் கோவை சென்று, அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் அவர் சென்றுவிடுவார்.

இதனிடையே, சென்னையில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு ‘வந்தே பாரத்’ ரயில் சேவை கடந்த மாதம், பிரதமரால் தொடங்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, சேலத்தில் இருந்து ‘வந்தே பாரத்’ ரயில் மூலம் நேற்று சென்னைக்கு சென்றார்.

முன்னதாக, சேலத்தில் உள்ள தன் வீட்டிலிருந்து, கட்சி ஆதரவாளர்கள் புடைசூழ ரயில் நிலையத்துக்கு வந்த அவர், கோவையிலிருந்து சேலம் வந்த ‘வந்தே பாரத்’ ரயிலில் பயணிகளோடு பயணியாக பயணித்து சென்னை சென்றார். அப்போது, பயணிகள் சிலர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE