தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மே 1 (இன்று) முதல் 3-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களிலும், மே 4-ம் தேதி சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, மே 1-ம் தேதி (இன்று) ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழையும், சேலம், தருமபுரி, நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 30-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், மதுரை பேரையூரில் 11 செ.மீ. திருநெல்வேலி ராதாபுரத்தில் 9 செ.மீ. கோவை பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், பில்லூர் அணை ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ. கோடநாடு, வாலாஜா, மணமேல்குடி, கோவில்பட்டி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE