புதுச்சேரியில் ஸ்டெனோகிராபர் தேர்வு | குளறுபடி நடந்ததாக பங்கேற்றோர் குற்றச்சாட்டு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பத்தாண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் நடந்த ஸ்டோனோகிராபர் தேர்வில் குளறுபடியால் பங்கேற்றோர் வாக்குவாதத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் கிரேடு 2 பணியிடங்களுக்கு கடந்த 2012ல் தேர்வு நடந்தது. அதன்பிறகு 10 ஆண்டுகளாக தேர்வு நடக்கவில்லை. பலமுறை அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 35 பணி இடங்களை நிரப்ப ஸ்டேனோகிராபர் தேர்வு இன்று நடந்தது.

காலையில் இரண்டு பிரிவுகளாக நடந்த தேர்வில் 520 பேர் வரை பங்கேற்றனர். மொத்தம் பத்து அறைகளில் இரண்டு பிரிவுகளாகத் தேர்வு நடந்தது. ஆனால் இத்தேர்வில் பங்கேற்றோர் பலரும் கண்ணீருடன் வெளியே வந்தனர். இதுதொடர்பாக தேர்வில் பங்கேற்றோர் கூறுகையில், "ஸ்டெனோகிராபர் தேர்வு குரல் பதிவு செய்து ஒலிபரப்பாக்குவதாகத் தெரிவித்து விட்டு திடீரென்று ஆட்கள் வாசிக்கத் தொடங்கினர். அதில் பலரும் பத்து நிமிட வாசிப்பை 7 நிமிடங்களில் முடித்தனர். அத்துடன் தவறாக வார்த்தை தெரிவித்ததாக பல வார்த்தைகளை திருத்திக்கொள்ள கூறினர். இது தவறானது. ஸ்டேனோகிராபர் பணிக்கு பத்து ஆண்டுகள் காத்திருந்து பத்து நிமிடத்தில் எங்கள் வாழ்க்கையை முடக்கிவிட்டனர். அதனால் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும்" என்றனர்.

பின்னர் அங்கு குளறுபடி ஏற்பட்டதாக பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பலரும் கண்ணீர் விட்டனர். ஆனால் அங்கிருந்த போலீஸார் இங்கு போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தனர். அதையடுத்து தலைமைச்செயலகம் வந்த அவர்களை, அங்கு குழுமக்கூடாது என்று அங்கிருந்து போலீசார் அகற்றினர். இதையடுத்து, ஸ்டேனோகிராபர் தேர்வை மீண்டும் நடத்தவேண்டும்; இத்தேர்வு முடிவை வெளியிடக்கூடாது; குளறுபடியால் வாழ்வை சீரழிக்கக்கூடாது" என்று முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE