“எந்த உலகத் தலைவரும் நிகழ்த்தாத சாதனை” - பிரதமரின் 100வது ‘மனதின் குரல்’ நிகழ்வு குறித்து அண்ணாமலை

By செய்திப்பிரிவு

சென்னை: "இதுவரை, உலகில் எந்த பிரதமரும், எந்த நாட்டின் தலைவரும், வானொலியின் வாயிலாக மக்களை சந்தித்ததில்லை. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க அதிபர் 13 முறை வானொலியில் பேசியதே, இதுவரை சாதனையாக கருதப்பட்டது. புதிய சாதனையாக 99 முறை மக்களிடம் வானொலியில் உரையாற்றிய நம் பாரத பிரதமர், நாளை 100-வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையும், "எனது அருமை நாட்டு மக்களே" என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி தன் உரையை தொடங்கும், "மனதின் குரல்" நிகழ்ச்சி 23 கோடி மக்களால் ரசிக்கப்படுகிறது. காணொளி தொடர்புகள் கண்ணிமைக்கும் நேரத்தில் கிடைக்கும் இக்காலக் கட்டத்தில், வானொலி மூலம் மக்களை வசீகரித்து, வாகை சூடிய பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நூறாவது "மான் கி பாத்" நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது. 100வது முறையாக "மனதின் குரல்"-ஆக தமிழில் மலர இருக்கிறது.

ஒரே நேரத்தில், நாடு முழுவதும் பல கோடி மக்களால் பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியை, தமிழக பாஜக சார்பில் ஒவ்வொரு மாவட்டந்தோறும், ஒவ்வொரு மண்டல் தோறும், கிளை அளவில் அனைவரும் காணும் வகையில், மக்களின் மனம் கவர்ந்த "மான் கி பாத்" நிகழ்ச்சியின் ஒலி, ஒளி பரப்புகள் பாஜகவின் கார்யகர்த்தர்களால் விரிவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, உலகில் எந்த பிரதமரும், எந்த நாட்டின் தலைவரும், வானொலியின் வாயிலாக மக்களை சந்தித்ததில்லை. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க அதிபர் 13 முறை வானொலியில் பேசியதே, இதுவரை சாதனையாக கருதப்பட்டது. புதிய சாதனையாக 99 முறை மக்களிடம் வானொலியில் உரையாற்றிய நம் பாரத பிரதமர், நாளை 100வது முறையாக "மான் கி பாத்" நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார்.

சாமானியர்களின் சாதனையை, மக்களின் கருத்தை, விருப்பத்தை, மக்களுக்காக வெளிப்படுத்தும் மகத்தான நிகழ்ச்சி "மான் கி பாத்". நூறாவது மான் கி பாத் நிகழ்ச்சியில் நம் பாரத பிரதமர் நாட்டு மக்களுக்கு விடுக்க இருக்கும் செய்தியை கேட்பதற்காக, நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE