கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு குறித்த உச்ச நீதிமன்ற கருத்துக்கு கே.பாலகிருஷ்ணன் பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, உயர் நீதிமன்றம் தெரிவித்த எந்தக் கருத்துகளையும் பிரதான வழக்கு விசாரணையின்போது விசாரணை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளது பாராட்டுக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு கடந்த 29.8.2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவருமே நிரபராதிகள் எனவும், அவர்கள் அனைவரும் எவ்வித முகாந்திரமுமின்றி கைது செய்யப்பட்டது தேவையற்றது என்றும், மாணவியின் மரணத்தில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமே இல்லை எனவும், அது தற்கொலை தான் என்றும் குறிப்பிட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தக் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆட்சேபணையை தெரிவித்ததுடன், ஜாமீன் மனுவினை விசாரிக்கும் போது வழக்கு தொடர்பான தகுதி (மெரிட்ஸ்) குறித்து விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டியும், முழுமையான விசாரணைக்கு முன்னதாகவே நீதிமன்றம் இம்முடிவுக்கு வந்துள்ளது குற்றவியல் நடைமுறைக்கு எதிரானது என்றும், சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே நீதிமன்றம் இம்முடிவுகளுக்கு வந்திருப்பது அந்த வழக்கின் விசாரணையை சிதைக்கும் என்றும் கருத்து தெரிவித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு மாணவியின் பெற்றோரும் கடும் ஆட்சேபனையை தெரிவித்ததுடன், இக்கருத்துகள் வழக்கு விசாரணையை பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டி, ஜாமீன்யை ரத்து செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் "உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துகள் ஜாமீன் வழங்கப்படலாமா வேண்டாமா என்பது குறித்து மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையில் வழக்கு தொடர்பான தகுதிகள் (மெரிட்ஸ்) குறித்து இந்தளவுக்கு விவாதித்திருப்பது முற்றிலும் அநாவசியமானது என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மேலும், ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, வழக்கு குறித்து விரிவாக விவாதிக்கூடாது என்பது ஏற்கெனவே சட்டரீதியாகத் தெளிவுபடுத்தப்பட்ட விஷயம் என்பதைத் தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்த எந்த கருத்துகளையும் பிரதான வழக்கு விசாரணையின்போது விசாரணை நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

இப்பின்னணியில் மாணவியின் மரணம் தொடர்பான வழக்கினை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல் துறையினர் எந்த அழுத்தத்திற்கும் இடம் தராமல் நேர்மையான முறையில் விசாரணையை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுடன், குற்றமிழைத்தோருக்கு உரிய தண்டனை வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE