சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி திட்டம்: தமிழ் வளர்ச்சித் துறை அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப் போட்டி நடைபெறும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு.

2022-ம் ஆண்டு ஜனவரி முதல்டிசம்பர் வரை தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் 33 பிரிவுகளின்கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன. போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நூல் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரமும், அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்கப்படவுள்ளது.

மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் (உரைநடை, கவிதை), சிறுவர் இலக்கியம், திறனாய்வு, மொழி வரலாறு,மொழியியல், மொழி வளர்ச்சி,இலக்கணம், நுண் கலைகள்(இசை, ஓவியம், நடனம், சிற்பம்),அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித்தமிழ், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, நாட்டு வரலாறு, கல்வெட்டு,தொல்லியல், கடலியலும் வணிகவழிகளும், அகழாய்வு, கணிதவியல், வானியல், இயற்பியல்,வேதியியல், பொறியியல், தொழில்நுட்பவியல், மானிடவியல், சமூகவியல், புவியியல், சட்டவியல், அரசியல், பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல், மருந்தியல், விளையாட்டு, மகளிர் இலக்கியம், தமிழர் வாழ்வியல் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்படும்.

இத்துறையின் வலைதளம் மூலமாக www.tamilvalarchithurai.tn.gov.in போட்டிக்குரிய விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டிக்கான விண்ணப்பத்துடன் 10 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100 ``தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை'' என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலையாக அளிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 30-ம் தேதிக்குள் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல்தளம், எழும்பூர் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும். மேலும் விவரங்களுக்கு 044 - 28190412, 28190413 தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE