சென்னை: சென்னை மாநகராட்சியின் பூங்காக்கள் பராமரிப்பது மற்றும் ஒப்பந்தங்கள் அளிப்பது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பூங்காக்கள் பராமரிப்பு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது, குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரர் மட்டுமே அனைத்து பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதால், முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என திமுக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
குறிப்பாக, மாநகராட்சி நீச்சல் குளத்தில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்புடைய ஒப்பந்ததாரர் உட்பட தொடர் புகாருக்கு உள்ளாகும் ஒப்பந்ததாரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து விளக்கமளித்த ஆணையர் ககன்தீப்சிங் பேடி, "பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் ஒப்பந்தம் எடுப்பதில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட உள்ளது. அதன்படி, பூங்காக்கள் பராமரிப்பு ஒப்பந்தங்கள் பல தொகுப்புகளாக பிரித்து ஒப்பந்தம் கோரப்படும். ஒரு தொகுப்பு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரருக்கு மற்ற தொகுப்பு ஒப்பந்தம் வழங்கப்பட மாட்டாது. பராமரிப்புக்கான தொகை பணியின் தர அளவீட்டு மதிப்பெண் அடிப்படையில் விடுவிக்கப்படும்.
» புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பின் நாளை 'கலைமாமணி' விழா: 216 பேர் விருது பெறுகிறார்கள்
» சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக - அதிமுக இடையே சலசலப்பு: கோபமடைந்த மேயர் பிரியா
இந்த விதிமுறைகள் படி ஒரு ஒப்பந்ததாரர் அதிகபட்சமாக 10-க்கும் குறைவான பூங்காக்கள் மட்டுமே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வழிவகுக்கும். இதனால் தரமாக பூங்காக்கள் பராமரிப்பது உறுதி செய்யப்படும்" என்று ஆணையர் விளக்கம் அளித்தார்.
இதன் தொடர்ச்சியாக பேசிய மேயர் பிரியா, "பராமரிப்புப் பணியை முறையாக மேற்கொள்ளாமல் தொடர் புகாருக்கு உள்ளான ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.