கும்பகோணம் | லஞ்சத்தை தடை செய்ய வேண்டும்: வாகன ஓட்டுநர்கள் ஆர்பாட்டம்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: லஞ்சத்தை தடை செய்ய வேண்டும் அல்லது அதனைச் சட்டமாக்க வேண்டும் என்று கும்பகோணத்தில் வாகன ஓட்டுநர்கள் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் வட்டம், அசூர் புறவழிச்சாலையில் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற் சங்கம் சார்பில் கருப்பு கொடியேந்தி, வில்லை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இதற்கு மாநிலச் செயலாளர் ஜெ.சுந்தரராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் ஹாஜாமைதீன்,டி.ராஜேஷ்குமார், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.தணிகைபாலன், எஸ்.செல்வேந்திரன், மாவட்டப் பொருளாளர்கள் எஸ்.வசந்த்ராஜ், வி.ஜீவா மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்பாட்டத்தில், “அத்திபள்ளி சோதனைச் சாவடியை அகற்ற வேண்டும், ஓட்டுநர் மற்றும் அரசு அதிகாரிகள் தாக்குவதை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும், லஞ்சத்தை தடை செய்ய வேண்டும் அல்லது அதனை சட்டமாக்க வேண்டும்.

வாகனத்தை வழிமறித்து லஞ்சம் வாங்குவதை நிறுத்த வேண்டும், ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் பங்கேற்று கருப்பு கொடியேந்தி, வில்லை அணிந்து லஞ்சத்தை எதிர்த்து முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE