30 மாத ஊதிய பாக்கி | பினாயிலை குடித்த புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: 30 மாதங்களாக ஊதியம் போடாததால் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அமுதசுரபி ஊழியர்கள் பயிர்களுக்கு மருந்து அடிக்கும் பாட்டிலில் வைத்திருந்த பினாயிலையும், கிருமி நாசினியையும் கலந்து குடித்ததால் 4 பேர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி அமுத சுரபியில் 30 மாதங்களாக ஊதியம் தரவில்லை. இதனால் ஊதியம் தரக் கோரியும், பணிதரக் கோரியும் கூட்டுறவுத்துறையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 1 மாதமாக போராட்டம் நடத்தியும் அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் காந்திவீதியிலுள்ள அமுதசுரபி தலைமை அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தை இன்றும் நடத்தினர்.

தொடர்ந்து 30 மாதங்களாக ஊதியம் தராமல் இருப்பதை அரசு தரப்பில் அழைத்து பேசவில்லை. தொடர்ந்து அரசு கவனம் செலுத்தாததால் அங்கிருந்த அமுதசுரபி ஊழியர்கள் திடீரென்று விஷம் குடிப்பதாக தெரிவித்து குடித்தனர். பாதுகாப்பில் இருந்த போலீஸார் அதைப் பறித்தனர். பட்டினி கிடந்து இறப்பதை விட விஷம் குடிக்கலாம் என முடிவு எடுத்தோம் என்றனர். பலரும் விஷம் குடிப்பதாக தெரிவித்து பாட்டிலை எடுக்க போலீஸார் அங்கிருந்தோர் அதை போராடி பறிமுதல் செய்யத் தொடங்கினர்.

போலீஸார் தரப்பில் கூறுகையில், "பயிர்களுக்கு மருந்து அடிக்கும் பாட்டிலில் பினாயிலையும், கிருமி நாசினியையும் கலந்து குடித்தனர். சிவா, குமரன், அய்யனார், முருகன், மணிமாறன், சிவஞானம் உட்பட 7 பேரை ஆம்புன்ல்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம்" என்றனர். அதையடுத்து அமுத சுரபியை போலீஸார் மூடினர். தொடர்ந்து அங்கிருந்தோரை கலைந்து போகச் செய்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பொது மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்குப் பிறகு உடல் நிலை அதிகளவில் பாதிப்பில் இருந்த சிவஞானம், குமரன், அய்யனார், மணிமாறன் ஆகியோர் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் குறிப்பிட்டனர்.

இதையடுத்து மருத்துவமனைக்குச் சென்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தொழிலாளிகள் முதல்வரை சந்தித்தால், அவர்களை திட்டி அனுப்புகிறார். இன்று நடந்தது சோக சம்பவம். அரசு தொழிலாளர்களை தற்கொலைக்கு தள்ளுகிறது. முழு பொறுப்பை முதல்வரும், தலைமைப் பொறுப்பாளரும் ஏற்க வேண்டும். " என்றார்.

அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் நேரில் வந்து பார்த்து கூறுகையில், "புதுவை மாநிலத்திற்கு அடையாளமாக செயல்பட்டு வந்த அமுதசுரபி கூட்டுறவு நிறுவனத்தை செம்மையாக நடத்த போதிய நிதி உதவியை அந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். அந்த நிறுவனத்தை நிர்வகிக்க ஒரு ஐஏஎஸ் அதிகாரியை சேர்மனாக முதல்வர் நியமனம் செய்ய வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE