பாஜக பிரமுகர் கொலை | திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை: அண்ணாமலை கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: "காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்" என்று வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பிபிஜி சங்கர், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.

காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் தமிழக பாரதிய ஜனதா கட்சி போராட்டம் நடத்தும் என்றும் எச்சரிக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பிபிஜி சங்கர். இவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநிலப் பொருளாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சென்னை கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லி அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சங்கரின் காரை பின்தொடர்ந்து வந்த, மர்ம நபர்கள் அவரது காரில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, வெட்டிப் படுகொலை செய்தனர். | வாசிக்க > காஞ்சிபுரம் பாஜக பிரமுகர் படுகொலை: 9 தனிப் படைகள் விசாரணை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE