சென்னை: பெண் எஸ்.பி-க்கு காருக்குள் வைத்து பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், தனக்கு எதிராக புகார் அளித்த பெண் எஸ்.பி. உள்ளிட்ட 4 பேரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி, சிறப்பு டிஜிபி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்புவழக்கறிஞர் அருள் செல்வம் ஆஜராகி, ‘‘ஏற்கெனவே போதிய அளவு புகார்தாரரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. நீதிமன்ற விசாரணையை இழுத்தடிக்கவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி வழங்கக்கூடாது’’ என தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி, பெண் எஸ்.பி.யின் கார் ஓட்டுநரிடம் மட்டும் குறுக்கு விசாரணை நடத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளார். அதேநேரம் பெண் எஸ்.பி. உள்ளிட்ட மூவரிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.