சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் - பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் இணைந்து நடத்திய சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த சவுராஷ்டிரா மக்கள் கலந்துகொள்ள வாய்ப்பு அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் வெற்றிக்குப் பிறகு பிரதமரின் ஒரே பாரதம், உன்னத பாரதம் எனும் உயரிய கோட்பாட்டினை, அடுத்த முன்னெடுப்பான சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் பிரதிபலித்தது. இந்தமுன்னெடுப்பை தனது மேற்பார்வையின் கீழ் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கும், சவுராஸ்டிரா தமிழ் சங்கமத்துக்கான தொழில்நுட்ப மற்றும் இலக்கிய, வரலாற்று தகவல்களை சேகரித்து வழங்க, திருச்சியைச் சேர்ந்த என்ஐடி கல்வி நிறுவனத்தை ஈடுபடுத்தியதற்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் நன்றி.

இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், குஜராத்தில் தங்கியிருந்த சவுராஷ்டிர சகோதர, சகோதரிகளுக்கு குஜராத் அரசு வழங்கிய விருந்தோம்பலுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த சவுராஷ்டிரா மக்களுக்கு, சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி என்றென்றும் நினைவில் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமருக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE