மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக துரைப்பாக்கத்தில் ஒரு மாதம் போக்குவரத்து மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலை, துரைப்பாக்கம் சிக்னல் சந்திப்பில் பிஎஸ்ஆர் மால் அருகில் பள்ளம் தோண்டி மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இந்த பகுதிகளில் இன்றுமுதல் (ஏப்.27) அடுத்த மாதம் 26-ம் தேதிவரை கட்டுமானப் பணி நடைபெற உள்ளது.

இதனால் இப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னைபோக்குவரத்து போலீஸார் நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பு:

200 அடி ரேடியல் சாலையிலிருந்து எஸ்ஆர்பி டூல்ஸ் செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் பிள்ளையார் கோவில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பிபஞ்சாயத்து சாலையில் சென்று வலதுபுறம் திரும்பி கார்ப்பரேஷன் சாலை வழியே ஓஎம்ஆர் சாலை செல்ல வேண்டும்.

ஓஎம்ஆர் சோழிங்கநல்லூரில் இருந்து வரும் அனைத்து இலகுரக வாகனங்களும் துரைப்பாக்கம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 200 அடி ரேடியல் சாலை சென்று பிள்ளையார் கோவில் தெரு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, பஞ்சாயத்து சாலை சென்று வலதுபுறம் திரும்பி கார்ப்பரேஷன் சாலை இடதுபுறம் ஓஎம்ஆர் சாலைசெல்ல வேண்டும். அனைத்து அரசுபேருந்துகளும் மற்றும் கனரக வாகனங்களும் எந்தவித திருப்பமுமின்றி ஓஎம்ஆர் சாலையில் இருபுறம் நேராக செல்லலாம்.

ஓஎம்ஆர் பணி தொடங்கும் போது, ஓஎம்ஆர் சோழிங்கநல்லூர் மற்றும் 200 அடி ரேடியல் சாலை செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும் கார்ப்பரேஷன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, பிள்ளையார் கோவில் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி துரைப்பாக்கம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ஓஎம்ஆர் சோழிங்கநல்லூர் செல்லலாம் மற்றும் பிள்ளையார் கோவில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி 200 அடி ரேடியல் சாலை வழியே காமாட்சி மருத்துவமனை செல்லலாம் என்றுபோக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE