சென்னை: மின்சார ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்த நண்பரைக் காப்பாற்ற தண்டவாளத்தில் இறங்கி ஓடியவர் ரயிலில் அடிப்பட்டு இறந்தார். திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம்(22).
இவரது நண்பர் சுனில் என்பவரை சிங்கப்பூருக்கு வழியனுப்பி வைப்பதற்காக, மற்றொரு நண்பர்அதே பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி(24) உட்பட 4 பேர் காரில் குரோம்பேட்டைக்கு ஏப்.24-ம் தேதி மாலை வந்தனர். சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏற அதிக நேரம் இருந்ததால், அதற்குள் மெரினா கடற்கரைக்குச் சென்று வர நண்பர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, காரை அங்கு வாகன நிறுத்தும் பகுதியில் நிறுத்திவிட்டு, மின்சார ரயிலில் ஏறிகடற் கரைக்குச் சென்று பொழுதைப்போக்கினர். இதன் பிறகு, திருவல்லிக்கேணியில் மின்சார ரயிலில் ஏறி, பூங்கா நிலையம் வந்தனர்.
அங்கிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் 4 பேரும் ஏறினர். இந்த ரயில் மாம்பலம் நிலையத்தைக் கடந்துசைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது, படிக்கட்டு பகுதியில் நின்றிருந்த ஆசைத்தம்பி திடீரென தவறிகிழே விழுந்தார். இதனால், நண்பர்கள் பதறினர்.
» பிளஸ் 2 தேர்வு முடிவு மே 8-ல் வெளியாகிறது - தேர்வுத் துறை அறிவிப்பு
» மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல் - சத்தீஸ்கரில் 10 போலீஸார் உயிரிழப்பு
தொடர்ந்து, நண்பர்களில் இருவர் சைதாப்பேட்டை நிலைய மேலாளருக்கு தகவல் கொடுக்க விரைந்தனர். மற்றொரு நண்பர் கவுதம், கீழே விழுந்த நண்பரைக் காப்பாற்ற தண்டவாளத்தில் இறங்கி பின்னோக்கி ஓடினர். அப்போது, தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில் அவர் மீது மோதியது. இதில், கவுதம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
மற்றொருவருக்கு சிகிச்சை: இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், ரயில்வே போலீஸார், 108 ஆம்புலன்ஸின்மருத்துவ ஊழியர்கள் விரைந்துவந்து, அவரை மீட்டு பரிசோதித்தனர். அப்போது, கவுதம் உயிரிழந்தது தெரியவந்தது.
ரயிலில் தவறிவிழுந்து காயமடைந்த ஆசைத்தம்பி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்குப் பிறகு,கவுதமின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.