கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1,600 கோடியில் புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

By இ.மணிகண்டன்

விருதுநகர்: கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.1,600 கோடியில் புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் புதிய அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். ரூ.1.20 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜையை வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் இன்று காலை தொடங்கி வைத்தனர்.

இப்புதிய கட்டிடத்தில் பிரசவ அறை, பிரசவ வார்டு, மருத்துவ அலுவலர் அறை, ஊசி போடும் அறை, மருந்து கட்டும் அறை, அவசர சிகிச்சை வார்டு, ஆய்வகம், மருந்தகம், தொற்ற நோய் சிகிச்சை பிரிவு ஆகியவை கட்டப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில், சத்துணவு பெட்டகம், சித்தா மருந்து பெட்டகம், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கான மருந்து பெட்டகம், கருத்தடை செய்த பெண்களுக்கான பரிசுப் பொருள், பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடிகள், காச நோயாளிகளுக்கான மருந்து பெட்டகம் உள்ளிட்டவற்றை அமைச்சர்கள் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.30.35 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கூடுதல் கட்டிடம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.3.71 விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்திற்கான கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளையும் ராஜபாளைய அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடியில் கூடுதல் மருத்துவமனை கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகளையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில், தமிழகத்தில் தற்போது 18 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மேலும் 25 இடங்களில் ரூ.1,038 கோடியில் புதிதாக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் கட்டப்பட உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.1,600 கோடியில் புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

அடர்த்தியான குடியிருப்பு பகுதிகளில், புதிய மருத்துவ கட்டமைப்பு மூலம் காலை 08.00 மணி முதல் மாலை 5.00 வரை இயங்கும் வகையில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில் இந்த மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்கள். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தற்போது ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சியில் 2 மையங்களும், விருதுநகர் நகராட்சியில் 3 மையங்களும், திருவில்லிபுத்தூர் 1 மையமும், அருப்புக்கோட்டை நகராட்சியில் 1 மையலும் என மொத்தம் 7 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ரூ. 1.75 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.30.35 கோடி கூடுதல் கட்டடம் கட்டும் பணிகளும், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்துவதற்கான புதிய கட்டட கட்டும் பணிகளும் இன்று துவக்கி வைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE