பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டனர்.

“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தில், முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆய்வின் போது, குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதன்படி, “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக, விழுப்புரம் செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில், மாலை 4 மணியளவில் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார். தொடர்ந்து விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு 3 மாவட்டங்களைச் சேர்ந்த அரசுத் துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மற்றும் கள ஆய்வு நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE