தூத்துக்குடி | மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் அலுவலகத்தில் புகுந்து விஏஓ கொலை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மணல் கொள்ளை குறித்து காவல் துறையில் புகார் கொடுத்த கிராம நிர்வாக அலுவலரை, அவரது அலுவலகத்தில் புகுந்து 2 நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவானவரை போலீஸார் தேடி வருகின்றனர். உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அடுத்த சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர், ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக (விஏஓ)பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் 12.30 மணி அளவில் தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 நபர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் அவர் சாய்ந்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

உயிருக்கு போராடிய அவரை சக ஊழியர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிற்பகல் 2.40 மணி அளவில் அவர் உயிரிழந்தார். அவருக்கு போன்சிட்டாள் என்ற மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

அலுவலகத்தில் புகுந்து விஏஓ வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விஏஓ உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர், ஆட்சியர் செந்தில் ராஜ் கூறியபோது, ‘‘விஏஓ லூர்து பிரான்சிஸ் நேர்மையானவர், துணிச்சல் மிக்கவர். இதற்கு முன்பு, ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை துணிச்சலாக அகற்றினார். அப்போதும் சிலர் அவர் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது மணல் திருட்டு தொடர்பாக காவல்துறையில் அவர் புகார் அளித்ததால், இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நேர்மையாக செயல்பட்ட அரசு அலுவலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்’’ என்றார்.

மணல் கொள்ளை: முறப்பநாடு பகுதி தாமிரபரணி ஆற்றில் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு (45) மற்றும் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டது தொடர்பாக முறப்பநாடு காவல் நிலையத்தில் விஏஓ லூர்து பிரான்சிஸ் கடந்த 13-ம் தேதி புகார் கொடுத்துள்ளார்.

அதன் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், ராமசுப்பு, அவரதுஉறவினர் மாரிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து லூர்து பிரான்சிஸை கொலை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ராமசுப்புவை முறப்பநாடு போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பணியில் இருந்த போது கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த துயரத்தை அளித்துள்ளது. தனது கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த அவரது பொறுப்புணர்வு, கடமை உணர்ச்சியை தமிழ்நாடு அரசு போற்றுகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல், வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விஏஓ கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE