குட்கா, பான்மசாலா, புகையிலைக்கு தடை நீட்டிப்பு - மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: குட்கா, பான்மசாலா, புகையிலை தடை ஆணை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், மீறுபவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2013-ம் ஆண்டு முதல் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையரால் பிறப்பிக்கப்பட்டு வந்த குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை தொடர்பான தடையாணையை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உயர் நீதிமன்றம் உத்தரவு: இதற்கிடையே மெல்லும் புகையிலைப் பொருட்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை ஆணையரால் விதிக்கப்பட்ட தடை ஆணையை கடந்த ஜனவரி 20-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி உணவுபாதுகாப்புத் துறை ஆணையர் ஆண்டுக்கு ஆண்டு தடையாணையை பிறப்பிப்பதன் மூலம்தனது அதிகாரத்தை மீறியுள்ளார்என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலையினால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் மற்றும் வருங்காலச் சந்ததியினரைக் கருத்தில் கொண்டு, தடையாணையை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் வாதத்தை ஏற்று,சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.

இதன்மூலம் குட்கா, பான்மசாலா மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவற்றுக்கான தடையாணை நீடிக்கிறது. இந்த தடையாணையை மீறுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE