மே 2 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜன.13 வரை நடந்தது. அத்துடன், பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த மார்ச் 20-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 21-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரைநடந்தது. நிறைவு நாளில் நிதித்துறை, வேளாண் துறை அமைச்சர்களின் பதில் உரை இடம் பெற்றது.

மார்ச் 29-ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், 21 நாள் பேரவை அலுவல்கள் நேற்றுடன் முடிந்தன. இதனைத் தொடர்ந்து, மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் பேரவையை ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வரும் மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பட்ஜெட்டில் வெளியான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE