முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சென்னையில் சிலை - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வி.பி.சிங், பூமிதான இயக்கத்தில் பங்கேற்றவர். அம்மாநில முதல்வர் மற்றும் மத்திய வர்த்தகம், பாதுகாப்பு, வெளியுறவு, நிதித் துறைஅமைச்சர் என உயர் பொறுப்புகளை வகித்தார். 1989-ல் தேசிய முன்னணியை உருவாக்கி, நாட்டின் பிரதமரானார்.

சுமார் 11 மாதங்களே அவர் பிரதமராக இருந்தாலும், அவரது சாதனைகள் மகத்தானவை. பி.பி.மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீட்டை வழங்கிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங். அதுமட்டுமின்றி, தகவல் அறியும் உரிமைச்சட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், வேலை உரிமையை அரசியல் சாசன உரிமையாக்கியது, மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில், தேசியப் பாதுகாப்புக் குழு, நுகர்வோர் பாதுகாப்பு என அவரது பதவிக் காலத்தில் பல சாதனைகளை நிகழ்த்தினார்.

தந்தை பெரியாரைத் தனது தலைவராக ஏற்றுக் கொண்ட வி.பி.சிங், கருணாநிதியை சொந்த சகோதரனைப்போல மதித்தார். 1988-ல் சென்னையில் நடைபெற்ற தேசிய முன்னணி தொடக்க விழாவில், மாபெரும் ஊர்வலத்தை தலைமை வகித்து நான் நடத்தி வந்தேன். வி.பி.சிங் பிரதமரான பின்னர்அதற்காக என்னைப் பாராட்டினார்.

அவர் அளித்த ஊக்கம் காரணமாகத்தான், சமூகநீதிப் பார்வையில், சமூகநீதிப் பயணத்தில் சலனமும், சமரசமும் இல்லாமல் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று சொல்லிவந்த மத்திய அரசை, 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒப்புக்கொள்ள வைத்தது திமுக உள்ளிட்டஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்கள்தான்.

இதை மனதில் கொண்டுதான், தேசிய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறோம்.

சிஆர்பிஎஃப் தேர்வை தமிழ்உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். தற்போது, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் சிஆர்பிஎஃப் உள்ளிட்ட அனைத்து மத்திய ஆயுதக் காவல் படை தேர்வுகளும் நடைபெறும் என்ற செய்தி வந்துள்ளது.

அந்த வகையில், சமூகநீதிக் கொள்கையை வழங்கியவர்களில் ஒருவர் வி.பி.சிங். காவிரி நடுவர்மன்ற ஆணையத்தை அமைத்தவர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணா பெயரும் சூட்டினார்.

அவரது நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்கு தமிழ்ச் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும், சென்னையில் அவரதுமுழு உருவச் சிலை அமைக்கப் படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

முதல்வரின் அறிவிப்புக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் காங்கிரஸ், பாஜகஉள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE