கும்பகோணம்: கும்பகோணத்தில் 10-ம் வகுப்பு இறுதி தேர்வு முடிந்ததையொட்டி மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது. கும்பகோணம் மாவட்டத்திலுள்ள 94 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் 51 தனியார் பள்ளிகளில் படித்த 13.315 மாணவர்கள் 50 மையத்தில் 10 வகுப்பு பொது தேர்வெழுதினர். இறுதி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வெழுதிய மாணவர்கள், கும்பகோணம் காந்தி பூங்கா அருகில், பட்டாசுகளை வெடித்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.
இது குறித்து ஏஆர்ஆர் மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கே.சீனிவாசன் கூறியது: ”இப்பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மையிலுள்ளவர்கள். இறுதி தேர்வெழுதி விட்டு இங்கு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக் கூறினோம். பின்னர், அவர்களது பெற்றோர்களின் செல்போன் எண்களை இணைத்து வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி, அதில் அந்த மாணவர்கள் மேல்படிப்பு படிப்பதற்கான வழிகாட்டியும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அவர்களுக்குத் தேவையான கல்விக்கான உதவிகளையும் செய்ய உள்ளோம். மேலும், அவர்கள் தொடர்ந்து படிப்பதற்கான தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரப்படும்” எனத் தெரிவித்தார்.