சென்னை பாரிமுனை அருகே பழைய கட்டிடம் இடிந்து விபத்து: உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: பாரிமுனை அருகே அரண்மனைக்காரன் தெருவில் தனி நபருக்குச் சொந்தமான பழைய 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சென்னை பாரிமுனை அருகேஅரண்மனைக்காரன் தெருவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 5 அடுக்கு மாடிக் கட்டிடத்தை பரத் என்பவர் அண்மையில் வாங்கியுள்ளார். இந்த கட்டிடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று காலை அந்த கட்டிடம் திடீரென இடிந்து தரைமட்டமானது. இதில் 2 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் கட்டிடத்தின் உரிமையாளர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிளனேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, கட்டிட உரிமையாளர் தீபக் சந்தன் மற்றும் பாரத் சந்தன் ஆகியோருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கட்டிட பழுது பார்க்கும் பணிக்கு சென்னை மாநகராட்சியின் முன் அனுமதி பெறாதது, பொதுமக்களுக்கு அபாயகரமான பாதிப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் பணியை மேற்கொண்டது போன்ற காரணங்களுக்காக, உரிய விளக்கத்தை உடனே அளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE