இலவச ஏர் ஆம்புலன்ஸ்களை இயக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நாடு முழுவதும் இலவச ஏர் ஆம்புலன்ஸ் சேவையை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், "சாலை விபத்துகளில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனால் விபத்து காலத்தில் கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் நேரத்தில் உடனடி சிகிச்சை கிடைக்காமல் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஏர் ஆம்புலன்ஸ் எனப்படும் ஹெலிகாப்டர் ஆம்புலன்சுகள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 49 ஏர் ஆம்புலன்ஸ்கள் உள்ளன. அவற்றில் 19 தனியாரால் இயக்கப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் மட்டும் தான் அரசால் இயக்கப்படுகிறது.

மத்திய அரசால் “சஞ்சீவனி சேவா” திட்டம் மூலமாக ஏர் ஆம்புலன்ஸ்களை இயக்கப்படுகின்றன. ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தியதால் கடந்த 3 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 100 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.எய்ம்ஸ் மற்றும் ரிஷிகேஷில் இருந்து 3 பிரத்யேக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தப்படுகிறது. உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும் சாலை மார்க்கமாக உறுப்புகளை கொண்டு செல்வதில் அதிக ஆபத்து இருக்கிறது. ஒரு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸை இயக்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ஒன்றரை முதல் 2 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. எனவே, இலவச ஏர் ஆம்புலன்சுகளை மத்திய மாநில அரசுகள் இயக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பிளீடர் பி.முத்துக்குமார், "இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறப்பான ஆம்புலன்ஸ் சேவை உள்ளது" என்று தெரிவித்தார்.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விளம்பர நோக்கத்திற்காக எந்த ஆதாரங்களும் இல்லாமல், தொடரபட்ட பொது நல வழக்கு எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE