புதுச்சேரி: குஜராத் மாடல் டயாலிசிஸ் முறையை புதுச்சேரியில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை ஆய்வுக் கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று (19-04-2023) நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறைச் செயலர் உதயகுமார், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌதரி, சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு, துணை இயக்குநர் டாக்டர் அனந்த லட்சுமி, இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர். செவ்வேள், அரசு மருந்தகங்களின் தலைமை அதிகாரி டாக்டர் ரமேஷ் மற்றும் மருத்தவ அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சுகாதாரத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அரசு திட்டங்களை சிறப்பாகவும் துரிதமாகவும் செயல்படுத்த துணைநிலை ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
மேலும், குஜராத் மாடல் டயாலிசிஸ் முறையை புதுச்சேரியில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.