நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படும்: பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மீனவர்கள் தங்களது கடைகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் சூழலில், சட்டப்பேரவையில் இன்று (ஏப்.19) எதிர்க்கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய ஓபிஎஸ், "மீனவர்கள் தொழில் செய்ய மெரினா லூப் சாலையை பயன்படுத்துவத்தற்கு வழிவகை செய்ய வேண்டும். மீனவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் பேசினர்.

இதற்கு சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர், "நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்ததன் அடிப்படையில் எடுக்கப்பட்ட சிறிய அளவிலான நடவடிக்கை இது. மீனவர்கள் தொடர்பான பிரச்சினை இன்று காலையொடு முடிவுக்கு வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.

முன்னதாக, சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை, அப்பகுதி மீனவர்கள் ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஐஸ் பெட்டிகளை சாலையோரம் வைத்துவிடுவதாலும், வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும்; மாலை 4 மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. நீதிமன்ற உத்தரவையடுத்து நொச்சிக்குப்பம் பகுதியில் சாலையோரம் இருந்த மீன் கடைகளையும், மீன் உணவகங்களையும் சென்னை மாநகராட்சி அகற்றியது.

இதனை எதிர்த்து மீனவர்கள் போராட்டம் நடத்த, கடந்த இரண்டு நாட்களாக அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர், மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என்றார்.

உயர் நீதிமன்றம் புது உத்தரவு: அதேவேளையில் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமும் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதில், மீனவர்கள் சாலையை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. மெரினா லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மீனவர்கள் கடைகளை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE