சென்னை: கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்.19) தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிகிறார்.
இதனைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்வார்கள். அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
இது தொடர்பான சட்டப்பேரவை அலுவல் தொடர்பான அறிவிப்பில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.