‘ஆருத்ரா’ தொடர்பான குற்றச்சாட்டு | ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு கேட்பேன்: ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை சவால்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடரப்பட்டு, ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுகவினர் 12 பேரின் சொத்துபட்டியல் என்று சில விவரங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14-ம் தேதி வெளியிட்டார். இதற்கு, ‘அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இதை செய்ய தவறினால், அண்ணாமலைக்கு எதிராக சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும்’ என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், திமுகவின் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக அண்ணாமலை பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள சட்ட அறிக்கையில், திமுகவினருக்கு சொந்தமான ரூ.3,478.18 கோடி மதிப்பிலான பள்ளிகள், ரூ.34,184.71 கோடி மதிப்பிலான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் மதிப்பு பொய்யானது என்று தெரிவித்துவிட்டு, அடுத்த வரியில், ஒருவர் திமுக உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும், அவருக்கு சொந்தமான சொத்துகள், நிறுவனங்கள், கட்சியின் சொத்தாக மாறாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு புறம், இது திமுக சொத்து இல்லை என்றும், மறுபுறம், வழங்கப்பட்ட திமுகவினரின் சொத்து விவரம் பொய் என்றும் கூறுவதற்கு மட்டும் திமுக அமைப்புச் செயலாளருக்கு உரிமை இருக்கிறதா?

பள்ளி, கல்லூரி, பல்கலை. விவரம்: ஒவ்வொரு ஊரிலும் திமுகவினருக்கு சொந்தமான பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் விவரங்கள் வழங்கப்பட்டன. இவர்கள் அனைவரும் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை, திமுக தலைமையகமான அறிவாலயத்தில் ஒப்படைக்கிறார்கள் என்று தெரிவிக்கவில்லை.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக நடந்த ஊழல் குறித்த அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றை சிபிஐயிடம் அளிக்க உள்ளோம். திமுக தலைவருக்கும், இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை, ஆர்.எஸ்.பாரதி பொறுமையாக இருக்க வேண்டும்.

நோபல் ஸ்டீல் நிறுவன ஒப்பந்தம்: அது மட்டுமின்றி, முன்னுக்குப் பின் முரணான சில கருத்துகளை ஆர்.எஸ்.பாரதி தனது சட்ட அறிக்கையிலும் தெரிவித்துள்ளார். ஒன்றில் நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்து இடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மற்றொன்றில் நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்துக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுக்கு அமைப்பு செயலாளர் எதற்காக பதில் அளிக்கிறார்.

ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் நான் ரூ.84 கோடி பெற்றுக் கொண்டதாக, செய்தியாளர் சந்திப்பின்போது ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டை ஆர்.எஸ்.பாரதி என் மீது சுமத்தியுள்ளார். என் மீதும், பாஜக மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொது வெளியில் வைத்ததற்கு, ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கோருகிறேன். இதை பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு செலுத்த விரும்புகிறேன்.

ஹிஜாவு நிதி நிறுவனம்: இதேபோல, ரூ.4,400 கோடி மோசடி செய்த ஹிஜாவு நிதி நிறுவனத்திடம் இருந்து, ரூ.100 கோடிபெற்றுக்கொண்டு இந்த நிதி மோசடியில் மு.க.ஸ்டாலின் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என்று நான் குற்றச்சாட்டு வைக்கலாமா என்றும் ஆர்.எஸ்.பாரதியிடம் கேள்வி எழுப்புகிறேன்.

என் மீதும், எனது கட்சி மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு அடுத்த 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்காவிட்டால், ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடரப்படும். அவர் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்டஅறிக்கையும் விரைவில் அனுப்பப்படும்.

இவ்வாறு திமுகவின் சட்டநடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக அண்ணாமலை பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்