செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்காக பேரவை நிகழ்ச்சி தொகுப்பு சைகை மொழியில் ஒளிபரப்பு - முதல்வர் தொடங்கிவைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளின் தொகுப்பை, செவித்திறன் மாற்றுத் திறனாளிகள் புரிந்துகொள்ளும் வகையில் சைகை மொழியில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தில் வலியுறுத்தியுள்ளவாறு, மாற்றுத் திறனாளிகளுக்கு பொது இடங்களில் தடையற்றச் சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

மொழிபெயர்ப்பாளர் வசதி: செவித்திறன் மாற்றுத் திறனாளிகளின் தகவல் பரிமாற்றத்துக்காக, மாவட்ட ஆட்சியர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் உட்பட அனைத்துஅரசு நிகழ்ச்சிகளிலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சைகை மொழிபெயர்ப்பாளர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது நடைபெறும் 2023-24-ம்ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்ச்சிகளை, செவித்திறன் மாற்றுத் திறனாளிகளும் தெளிவாக அறிந்து கொள்ளும்வகையில், சைகை மொழிபெயர்ப்பாளர் மூலமாக சைகை விளக்கக் காணொளி தயாரித்து, செய்தித் துறை வாயிலாக அதை ஊடகங்களில் ஒளிபரப்பு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

யுடியூப், சமூக ஊடகங்கள்: அதன்படி, செவித்திறன் மாற்று திறனாளிகள் அறிந்துகொள்ளும் வகையில், தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளின் தொகுப்பு, யுடியூப் மூலமாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் ஒளிபரப்பு செய்யும் வகையில், சைகை மொழியில் பதிவுசெய்யும் நிகழ்வை பேரவைத் தலைவர் மு.அப்பாவு முன்னிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, பி.கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலர் ஆர்.ஆனந்த குமார், சட்டப்பேரவைச் செயலர் கி.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE