டிஜிட்டல் முறையில் குழந்தை தடுப்பூசி சான்றிதழ் - சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் அமல்படுத்த திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறையில் குழந்தைகளுக்கான தடுப்பூசிசான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை, சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் அமல்படுத்தப்பட உள்ளது.

தேசிய தடுப்பூசி அட்டவணையின்கீழ் குழந்தைகளுக்கு மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்சா தொற்று, கல்லீரல் தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல், விட்டமின்-ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இத்திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் 9.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11 ஆயிரம் இடங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. தடுப்பூசி தவணைக்கென தனியாக புத்தகம் அல்லது அட்டைகள் அச்சிடப்பட்டு அதில் கைகளால் எழுதிக் கொடுக்கும் முறையே இதுவரை கடைபிடிக்கப்படுகிறது.

குறுஞ்செய்தியில் நினைவூட்டல்: இந்நிலையில், மத்திய அரசின் ‘யூ-வின்’ செயலி மூலமாக தடுப்பூசி சான்றிதழை டிஜிட்டல் முறையில் வழங்கும் திட்டம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. சோதனை முயற்சியாக திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியபோது, ‘‘சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம், உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் தடுப்பூசி தவணை நிலையை அறிந்துகொள்ள முடியும்.‘யூ-வின்’ செயலியில் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதேபோல, அந்த செயலியில் பதிவு செய்யப்பட்ட பெற்றோர் அல்லது காப்பாளரின் கைபேசி எண்ணுக்கு தடுப்பூசி தவணையை நினைவூட்டி குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பப்பட உள்ளது. இதன்மூலம் தடுப்பூசி செலுத்தும் தவணையை தவறவிடுவது தடுக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE