கர்நாடக பாஜக ஊழல் பட்டியல் | தம்பி ஒவ்வொன்றாக செய்வார் - அண்ணாமலை குறித்து சீமான்

By என். சன்னாசி

மதுரை: சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து பேசிய சீமான், "ஆர்எஸ்எஸ் பேரணி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நடக்கிறது. பேரணி என்றால் அதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். இவர்கள் வலுக்கட்டாயமாக நடத்த வேண்டும் என்பதற்காக நடத்துகின்றனர். அதில் ஒன்றும் பெரிய செய்தி இல்லை.

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். இருக்கிற வானூர்தி நிலையங்களிலே, பறப்பதற்கு வானூர்தி இல்லாத நிலையில் புதிதாக விமான நிலையம் எதற்கு. சொந்தமாக வானூர்தி இல்லாத நாட்டிற்கு எதற்கு வானூர்தி நிலையம். நகைச்சுவையாக இல்லையா இது.

முன்னோர்கள் விலை நிலங்களாக மாற்றுவதற்கு அதிக விலை கொடுத்து இருக்கின்றனர். முதலில் வானூர்தியை கொண்டு வாருங்கள் பிறகு பேசுவோம். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள வானூர்தி நிலையம் பத்தவில்லை என போராடினார்களா? வசதி குறைவாய் இருக்கிறது என்று சொன்னார்களா?. மக்களின் போராட்ட உணர்வை புரிந்து கொண்டு அரசு இந்த செயலை கைவிட வேண்டும்.

அதேபோல், மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்க வேண்டும். நாங்கள் கேட்காததை கொடுக்கிறார்கள், கேட்பதை கொடுப்பதில்லை. எங்கள் பெண்கள் எல்லாம் வீதியில் வந்து இலவச பஸ் பாஸ் கேட்டார்களா? குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டார்களா? கேட்காதது எல்லாம் கொடுக்கிறார்கள். ஆனால் மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு கொடுக்கும் உதவி தொகை போதவில்லை என கேட்கிறார்கள் அதை கொடுக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து அண்ணாமலை அனைத்துக் கட்சி ஊழல் பட்டியலும் வெளியிடுவேன் எனக் கூறியுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், "அதுபோல் அவர்கள் கட்சியின் ஊழல் பட்டியலையும், கூட்டணி கட்சியின் ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். கர்நாடகா பாரதிய ஜனதா கட்சி ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். தம்பி ஒவ்வொன்றாக செய்வார் என்று நினைக்கிறேன்.

ஊழல் பட்டியலை வெளியிடுவதில் பயனில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமானவரித் துறை, அமலாக்க துறையும் உங்களிடம் தான் இருக்கிறது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் இந்த செய்தி எனக்கு வேடிக்கையாக இருக்கிறது" என்று கூறினார்.

தொடர்ந்து பென்னிகுக் சிலை தொடர்பாக பதிலளித்த அவர், "லண்டனில் வைக்கப்பட்டுள்ள பென்னிகுக் சிலைக்கு முழுமையாக பணம் செலுத்தாததால் கருப்புத் துணியால் மூடப்பட்டுள்ளது. பென்னிகுக் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம் .போற்றத்துக்குரிய பெருந்தகை அவருக்கு அரசு உரிய தொகையை செலுத்தி கருப்பு துணியை அகற்ற செய்வதுதான் அதற்குரிய பெருமையாக இருக்கும். அது அரசு செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இந்தியர்கள் என்றால் இந்தி பேசுபவர்கள் மட்டும்தான். ஆட்சியாளர்களுக்கு எங்களுடைய நிலம், வளம், எல்லாம் தேவைப்படுகிறது. வருமனம் தேவைப்படுகிறது. ஆனால் எங்களுடைய உணர்வு, உயிர் உரிமையை எல்லாம் அவர்களுக்கு பொருட்டே கிடையாது. அதான் பிரச்சனை.

வட இந்திய தொழிலாளர்கள் தமிழகம் வருவது வயிற்றுப் பசிக்காக வருகிறார்கள், பாவம் என கூறுகின்றனர். நாங்கள் மீன் பிடிப்பது வசதி வாய்ப்புக்காக போகிறோமா? சாவது தமிழனாக இருந்தால் சகித்துக் கொள்ளலாம். லட்சக்கணக்கானோர் கடலுக்குள் செத்தாலும், ஆந்திரா செம்மரக்காட்டுக்குள் செத்தாலும், சகித்துக் கொள்ளலாம் இப்படி தான் நிலைமை இருக்கிறது" எனக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE