வட சென்னையில் ரூ.30 கோடியில் 5 கி.மீ நீள கடற்கரை; குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம் ரூ.60 கோடியில் விரிவாக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையில் 2023-2024ம் ஆண்டுக்கான, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடந்தது. இதற்கு பதில் அளித்தும், அறிவிப்புகளை வெளியிட்டும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் இந்த ஆண்டு மொத்தம் 50 அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

அவற்றில் முக்கியமானவை...

1. தற்போது கட்டப்பட்டுவரும் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம் சர்வதேச தரத்திற்கு ரூ.60 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்தல்.

2. திருவொற்றியூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் வடசென்னை மக்களுக்குப் பயன்படும் வகையில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை மேம்படுத்தப்படும்.

3. சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃகு அங்காடி வளாகம் ரூ.33.35 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்படும்.

4. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், மாதவரம் சரக்கு உந்து முனையத்தில்

உள் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.30.30 கோடி நிதியை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கும்.

5. சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி, வரதராஜபுரத்தில், ஒப்பந்தப் பேருந்துகள் நிறுத்துமிடம் ரூ.29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

6. கிழக்குக் கடற்கரையில் நீலாங்கரை முதல் அக்கரை வரை, முதற்கட்டமாக சுமார் 5 கி.மீ நீளத்திற்கு மிதிவண்டிப்பாதை மற்றும் நடைபாதை, ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

7. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஊரப்பாக்கம் ஏரி வரை, ரூ.17 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.

8. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மருத்துவ சிகிச்சை மையத்துடன் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

9. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தினுள், 6 ஏக்கரில், ரூ.8 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்படும்.

10. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள அயனஞ்சேரி - மீனாட்சிபுரம் சாலையினை ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

11. சென்னையிலுள்ள நான்கு மேம்பாலங்களின் கீழ் உள்ள இடங்கள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அழகு படுத்தப்படும்.

12. சிறுசேரியில் அமைந்துள்ள 50 ஏக்கர் வன நிலத்தில், ரூ.5 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வனம் ஏற்படுத்தப்படும்.

13. சென்னை வெளிவட்டச் சாலையில் 4 உடற்பயிற்சிப் பூங்காக்கள் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்படும்.

14. கிளாம்பாக்கத்தில் ரூ. 393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம், ஜூன் மாதத்தில் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு முதல்வரால் திறக்கப்படும்.

15. சென்னைப் பெருநகரப் பகுதியில், மனைப்பிரிவுகளுக்கான திட்ட அனுமதி, இணைய வழியாக வழங்கப்படும்.

16. சென்னைப் பெருநகரப் பகுதியிலுள்ள பாரம்பரிய கட்டடங்களைப் (Heritage Buildings) பாதுகாப்பதற்காக மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைச் சான்றிதழ் வழங்கப்படும்.

முதன்முறையாக சென்னைப் பெருநகர பகுதிக்குட்பட்ட 26 சட்டமன்றத் தொகுதிகளில் 34 அறிவிப்புகளுக்கு ரூபாய் 233 கோடியே 75 இலட்சத்திற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன.

இதில், குழுமத்தின் 16 அறிவிப்புகள் ரூபாய் 260 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

ஒட்டுமொத்தமாக இந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரூபாய் 493 கோடியே 90 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இவ்வாறான அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE