சென்னை: ஆக்கிரமிப்புகளுக்கு `யெஸ்' சொல்லி, போக்குவரத்துக்கு `நோ' சொன்னால் சிங்காரச் சென்னை திட்டம் எப்படி சாத்தியமாகும் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள லூப் சாலையை சாலையோர மீன் கடைகள் ஆக்கிரமித்துள்ளன என்றும், ஐஸ் பெட்டிகள் மற்றும் மீன் வாங்க வருவோர் வாகனங்களை சாலைகளிலேயே நிறுத்துவதால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ``லூப் சாலையில் மீன் கடைகள் நடத்தும் வியாபாரிகள் மற்றும் மீனவர்களுக்காக ரூ.9 கோடியே 97 லட்சம் செலவில் புதிதாக மீன் சந்தை அமைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிவடைந்து அந்த சந்தை 6 மாதங்களில் திறக்கப்படவுள்ளது.
அதுவரை மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டுதற்காலிகமாக போக்குவரத்தை முறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். லூப் சாலையில் உள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து உரிமம் பெறாத உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றமாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், லூப் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து உணவகங்கள் செயல்பட அனுமதிவழங்கியது யார்? மீன் கழிவுகளை கொட்டுவதற்காகவா இந்த சாலை போடப்பட்டது என கேள்வி எழுப்பினர்.
பின்னர் ஆக்கிரமிப்புகளுக்கு `யெஸ்' சொல்லி போக்குவரத்துக்கு `நோ' சொன்னால் சிங்கார சென்னை எப்படி சாத்தியமாகும், என கேள்வி எழுப்பினர்.
மேலும் லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் ஏப்.18-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நாங்கள் மீனவர்களையோ அல்லது அவர்களின் வாழ்வாதாரத்தையோ தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதேநேரம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமிப்பதையும் ஏற்க முடியாது என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.